இல்லாமலின் இருத்தல்

Posted by as கவிதை, தமிழ்





வானம் முழுக்க நட்சத்திரங்கள்

நிறைந்திருந்தாலும்,

வராமல் போன ஒற்றை நிலவிற்காகவே

ஏங்கிக்கிடக்கிறது மனம்..

பத்தொன்பது கேள்விகளுக்கு,

சரியாய் விடையளித்தும்,

தவறவிட்ட இருபதாம் கேள்வியே

தேர்வறைக்குப் பின்னும்

தொடர்ந்து வருகிறது.

மாலைமுழுதும் அவளுடன்

இருந்தும் கூட,

அவள் சென்ற பிறகு,

அவள் அமர்ந்திருந்த பெஞ்சையே

வெறிக்கப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

புலம்பெயர்ந்த பிறகுதான் புரிகிறது,

இட்லியும் சாம்பாரும்

இன்னபிற முன்னாள் அலட்சியங்களும்,

இந்நாள் ஏக்கமென்று..

எதிரியாய் கருதியவனின்

மரணத்திற்கு பிறகே உறைக்கிறது,

தவற விட்ட தருணங்களும்,

நழுவிப்போன நட்பின் கணங்களும்..

ஒரு முறை கைகுலுக்கியிருக்கலாமோ?

இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாமோ?

இன்னும் கொஞ்சம் சுகித்திருக்கலாமோ?

கிடைக்கப்போவதில்லை

எனத் தெரிந்தே தேடுவது

பைத்தியக்காரத்தனமாய்த்

தெரியலாம்..

என்ன செய்ய..?

எத்தனை இருந்தாலும் கூட,

இல்லாமல் போவதிலும்,

அதன் இல்லாமை தரும் சோகத்திலும்,

அடையாளம் காணமுடியா முகமூடியோடு

ஏதோ ஒரு சுகம்

ஒளிந்திருக்கத்தான் செய்கிறது

Popularity: 4%



கடவுளுக்கான வாய்ப்பாடு

Posted by as கவிதை, தமிழ்


வாரிச் சுருட்டிக்கொண்டு

காலையில் ஒரு கச்சேரி,



காலைக் காப்பி முடிக்கையில்,

சாலமன் பாப்பையா,



அரக்க பரக்க

மதிய உணவை முடித்தால்,

நமீதா வகையறா பேட்டி,



வாயைப் பிளந்து பார்க்க,

இந்தியத் தொலைக்காட்சிகளில்

முதல்முறையாக… என



ஓரிசாவில் சண்டைபோட்டுக் கொண்டாலும்,

எல்லா கடவுளர்க்கும்

ஒரே வாய்ப்பாடுதான், இங்கு..



செய்தி:

சர்வ சமய சமத்தும்

இந்தியாவில் இல்லையாம்..!

Popularity: 4%



அவளைப் போல் ஒரு கவிதை..!

Posted by as கவிதை, தமிழ்


பழனிபாரதியின் ‘மழைப்பெண்’ கவிதைத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கவிதை ஒன்றுண்டு.



அது,




“ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு

ஆணும் போதாது காதலுக்கு..

நிலா வேண்டும், மழைவேண்டும்,

மீன் வேண்டும், காடு வேண்டும்,

தும்பி வேண்டும், மழலை வேண்டும்,

மண்புழு வேண்டும்,

கவிதை வேண்டும்.. “

காதல் கவிதைகள் என்றால் கவிஞர்கள் செய்த காலவிரயம் என்று எண்ணியிருந்த எனக்கு மாற்றுக்கருத்து ஏற்பட உதவிய கவிதைகளில் இதுவும் ஒன்று.( இன்னும் பல உண்டு. அவற்றை பிறகு பார்க்கலாம்)


ஆனால், ஒன்று நிச்சயம். நானும் கொஞ்சம் காதல் எழுதவேண்டும் என்ற ஆவல் துளிர்விட்டது. இதோ நான் எழுதிய கொஞ்சம், இங்கே..

காதல் வந்தாலே, உலகியல் வரையறைகள் தகர்ந்து போவது சகஜம்தான். கவிதையும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் எழுதியதை கவிதைகள் என்று சொல்லமாட்டேன். காதல் பித்தில், சில பிதற்றல்கள்.. அவ்வளவே.. !! காதலின் தீண்டல் கண்டவர்களுக்கு இவை சுவைக்கலாம்..!!!

கவிதையை படங்களுடன் காண, இங்கே செல்லவும்..

  • பாடுபொருளாய்

    காதலைக் கொள்வேனென

    கனவிலும் நினைக்கவில்லை.

    நீ

    வந்தாய்..!
  • உன்னில் பிறக்கும்

    கவிதைகளின்

    வளர்ப்புத்தாய்

    நான்..!

  • என் கவிதைகளுக்கு

    முதலும் முடிவும்

    ஒரே புள்ளிதான்,

    முடிவிலியைப் போல,

    நீ..!


  • எத்தனை அலை

    வந்து சொல்லிச்சென்ற

    பின்னும்,

    மிச்சமிருக்கின்றன

    கடலைப்பற்றிய கதைகள்,

    உன்னைப் பற்றிய

    என் கவிதைகளும்…


  • நம்மில் அல்ல,

    நமக்கிடையே

    நிரம்பியிருக்கிறது,

    காதல்..!


  • எழுதாமல் விட்ட வரிகள்தான்

    அதிகம் சொல்கின்றன..

    என் காதலை.. !


  • தேவதைக் கதைகளை

    கேட்டதில்லை நான்..

    ….

    பார்த்திருக்கிறேன்..!


  • என் கவிதைகளை

    அர்த்தமிழக்கச்செய்யும்

    அகராதி

    நீ..!

Popularity: 6%



அகம் பிரம்மாஸ்மி

Posted by as கவிதை, தமிழ்




எண்ணம் தப்பும் வேளைகளில்

எண்ணிப் எண்ணிப் பார்க்கிறேன்,

என் கனவுகளை..

பலித்ததும், இழந்ததும்

வேண்டுவதும், வேண்டியதும்

விதவிதமாய் வந்து சென்ற கனவுகள்..

நினைவுகளின் ஏட்டில்,

பலித்தவற்றைக் காட்டிலும்

பலிக்காமல் தொலைந்தவையே

இன்னும் பலம் பெற்றிருக்கின்றன..

வெற்றிடத்தின் தத்துவத்தை

அறிவியலில் அறிந்ததைக்காட்டிலும்,

ஏதேனும் ஒன்றை இழந்ததில் உணர்ந்ததே

நினைவில் நிற்கிறது..

முன்னிரவோ முதல்பகலோ

வினைத்தொகையாய்,

முக்காலத்திலும் முடிவின்றி

நீளும் கனவுகள்..

அய்யனார் கோவிலும்,

பீர்முகமது வீட்டுக் கொல்லையும்,

அஞ்சு கண்ணு பாலமும், ஒற்றைப்பனையும்

வந்த அந்த இரவின் கனவை

இன்னும் சேமித்து வைத்திருக்கிறேன்..

ரகுவரன் வைத்த வெடிகுண்டை

நானும் ஒருமுறை

செயலிழக்கச்செய்திருக்கிறேன்.

ராமசாமி வாத்தியாரை

பிரம்பால் அடித்திருக்கிறேன்..

கேப்டன் வ்யோமுடன்

அண்டம் சுற்றி அலைந்திருக்கிறேன்..

சில சிரிக்க வைத்திருக்கின்றன

சில சிலிர்க்கவைத்திருக்கின்றன..

புரட்டப்படாத கனவுகளின் சில பக்கங்கள்

செல்லரித்தும் போயிருக்கின்றன,

எவ்வாறாயினும்,

அவை என் கனவுகள்..

என் சிருஷ்டியின் குழந்தைகள்

அவற்றின் பிரம்மன் நான்தான்..

என் படைப்பில் பெருமையிருக்காதா எனக்கு?

அதனால்தான்,

கனவுகள் கறுப்பு வெள்ளையென சொன்ன

ஆசிரியருக்கு நிறக்குருடு என சிரித்தேன்..

ஆனால்,

ஊக்கம் தொலைத்து உறைந்து நிற்கும்

வேளையிலும்,

உடைந்து போன வாழ்வுக்கு வண்ணமிடுபவை

இந்த கறுப்பு வெள்ளை கனவுகள்

என உணர்ந்தபின்,

கண்களைத் தொலைத்தவனல்ல

கனவுகளைத் தொலைத்தவனே

குருடன் என்றேன்..

இன்றும்

வண்ணங்கள் சிந்தியபடி,

புரட்டப்படுகின்றன

என் நினைவுகளின் ஏட்டில்

சில கனவுகள்..

பலித்தவையும், தொலைத்தவையும்..

தான் சேமித்த காசை எண்ணி எண்ணிப் பார்த்து

மகிழும் கருமியைப் போல,

எண்ணம் தப்பும் வேளைகளில்

எண்ணிப் எண்ணிப் பார்க்கிறேன்,

என் கனவுகளை…



Popularity: 5%



படித்ததில் பிடித்தது (1)

Posted by as எழுத்தாளர்கள், கவிதை, தமிழ்


எழுத்தெனப் படுவது…


அதை நான்

எழுதி முடிக்கும் போது

அதற்கான சுவடுகள்

அழிந்து போயிருக்கும்.

அவற்றின் சுவடுகளாய்

என்

எழுத்துக்கள் இருக்கும்


எழுதும் முன்

எது என்னை வதைத்ததோ

அது உங்களை

வதைக்கத்தொடங்கும் போது

நான் எழுதப்பட்டிருப்பேன்








-மு. மேத்தா



(ஆகாயத்துக்கு அடுத்த வீடு)

Popularity: 5%



சரித்திரம் பேசட்டும்…

Posted by as கவிதை, தமிழ்






நான் வெற்றியென்று வெறிகொண்டு அலைந்தவர்களில் ஒருவன்

எது வெற்றி? கேள்வியில் கரைந்தவர்களில் முதல்வன்

அலையாத ஊருமில்லை!! தேடாத தேசமில்லை!!!



வெற்றி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி காட்சி தந்திருக்கிறது.

ஒரு சிலருக்கு வெற்றி எனும் சொல்லின் பொருள்

கல்விச்சாலையிலேயே முடிந்து போகிறது - இன்னும் சிலருக்கு

பணம் புகழ் பெண் செல்வம் என படிப்படியாக நீள

கடைசியில் ஒருவன் சொன்னான்



“உன்னுடைய வெற்றியை உன்னைத்தவிர

வேறு யாரால் தீர்மானிக்க முடியும்??”

இமயமலையின் உச்சிக்கே சென்றாலும் அது வெற்றியல்ல

உன் கண்களில் இருப்பது ஆகாயமென்றால்..



நானும் முடிவெடுத்தேன்

எனக்கு எல்லைகளற்ற ஒரு தேசம் வேண்டும்.

மன்னவன் எண்ணத்திற்கு மறுப்பேது?

அன்றைக்கே பட்டறைகளில் பொறி பறந்தது..



பார்சிறுக்கும் படைதிரட்டி பெரும்போர் தொடுத்தேன்

எதிர்த்தவர் தலைகளை

என் யானைகளுக்குக் கால்பந்தாடக் கொடுத்தேன்

மிச்சமின்றி துவம்சம் செய்து வெற்றி வாகை சூடினேன்





என் பாவங்களுடன் சேர்த்து

என் தேசத்து எல்லையும் விரிந்தது



* * * * * * * * *



“நாடு கடத்துங்கள் இவனை..!”

ஒருநாள் அனிச்சையாய் ஆணையிட்ட போதுதான்

கடத்துவதற்கு நாடே இல்லையென பதில்வந்தது



நாடு என்பது நிலத்துக்கல்ல; மனிதர்களுக்கு

பாதி பேரை நான் கொன்றேன்; மீதி பேரை போர் கொன்றது

இப்படி இருக்கையில் எப்படி இருக்கும் இனி நாடுகள்?



வெற்றிக்கு நான் தந்த வரையறை தவறோ?

முதன் முறையாக

கடந்து வந்த பாதை மீது சந்தேகம் வந்தது..

இழுக்கெனத் தெரிந்தும் துணிந்தபின் எண்ணினேன்..



நான் ஒருவன் வாகைப்பூ சூடுவதற்காக

ஆயிரமாயிரம் பெண்டிர் பூவிழந்தனர் என்பது

ஏன் எனக்குத் தெரியவில்லை?

நான் செய்த தவறுக்கு பூக்களுக்கும் ஏன் தண்டனை?

முடிவில் வெற்றியும்தான் எவ்வளவு சோகமானது..!



மனதில் ஒரு மின்னல்..

நீ முடிவென்று நினைக்கும் வரை எதுவும் முடிவல்ல

தற்கொலை என்பது எதிரியைக் கண்டு பயந்த

கோழையின் சவப்பெட்டி

பராக்கிரமம் பாடும் ஆயிரம் அடைமொழிகளும்

அதைவிட அதிகமாய் விழுப்புண்களும் சுமந்தவன் நான்.

எனக்கான முடிவு இதுவல்ல..

அதனை நானே தேடிக்கொள்கிறேன்..

மனதின் ஒரு ஓரம் மீண்டும் சொன்னது

-“என்றும் எனக்கு எல்லைகள் இல்லை”

Popularity: 6%



எனக்கென…

Posted by as கவிதை, தமிழ்






நாளின் இனிமை சொல்லும் இளகிய மாலை…

வானவில்லும் வியந்து போகும் அழகிய சோலை..

பூக்களின் பாடலை என் காதில் ஓதி

போதை கூட்டியது தென்றல்..

தனிமையில் அமர்ந்திருந்த நான்

என்னைச்சுற்றிய புல்வெளியில்

பனித்துளியாய் மாற யத்தனித்த நேரம்,

முன்னறிவிப்பின்றி என் முன்னே வந்தமர்ந்தது

ஒரு பட்டாம்பூச்சி



அனிச்சையாய் கைகள் நீட்டினேன்..

எதற்காக? பிடிப்பதற்கா?

தெரியவில்லை..

பிடித்தால் என்ன செய்யப்போகிறேன்?

மென்மையின் மேனி தீண்டவோ?இல்லை

வழித்துணையாய் வீடு செல்லவோ?

விடையில்லை.. ஆனாலும்

உள்மனதில் உருக்கொண்ட ஆசையில்

உடன் களத்தில் குதித்தேன்.





எழுந்து நெருங்கினேன்.

மெல்ல படபடத்து

அடுத்த மலருக்குத் தாவியது..

தொடர்ந்தேன்..

அதற்கடுத்த மலருக்கும்..

என் பிரயாசை அனைத்தையும்

தன் ஒற்றைச் சிறகசைப்பில் தட்டிவிட்டபடி

பூக்களுக்கிடையில் ஒரு பிரௌனியன் பாதையில்

சிறகடித்தது பட்டாம்பூச்சி..



நீண்டு கொண்டே சென்ற

அந்த நிகழ்காலத்தின் முடிவில்

நிச்சயமற்று நான்..

கடந்து செல்வது மலர்ப்பாதை எனினும்

என் மனதுக்குள் ஒற்றை முள்ளாய்

ஒரு ஏமாற்றம்..





திரும்பிப்பார்த்த போது

தொடங்கிய இடத்திலேயே நான்..

கால்கள் களைத்து கடைசியில் வந்தமர்ந்தேன்..

காட்சி இன்பத்தில் மனம் லயிக்கவில்லை..

மனதில் வெறுமை மட்டுமே நிரம்பி வழிந்தது..

சாதாரண வெறுமையல்ல..

அள்ள அள்ளக் குறையாத வெறுமை.

கண்ணைச்சுற்றி காட்சியிருந்தும்

காணமுடியாத வெறுமை..

பச்சைப் புல்வெளிகளில் இருந்த ஆனந்தம்

இப்போது இல்லை.

இப்பூங்காவின் கவின் முழுமையும்

அந்த ஒற்றைப் பட்டாம்பூச்சி

களவாடிச் சென்று விட்டதாய்த் தோன்றியது..



இருக்குமிடமெங்கும் மெல்ல இருள் படர்ந்தது.

என் மனதிலும்தான்..

வானம் பார்த்தேன்..

என்னைப் போலவே தனிமையில்

அந்த நிலா..

எனக்காய் அழுவதாய்த் தோன்றியது.

நிலவுக்கு ஆறுதல் சொல்லும் தைரியம்

எனக்கிருக்கவில்லை…

மௌனமாய் தரை நோக்கியிருந்தேன்..

மனதினுள் ஏதோ ஒரு சலசலப்பு..

துரத்தல் தொடங்கிய அதே மலர் மீது

பட்டாம்பூச்சி மீண்டும்.



இம்முறை என் கைகள் நீளவில்லை..

மௌனமாய்ப் புன்னகைத்தபடி விழி மூடினேன்..

நொடிகளும் யுகங்களும்

உருபுமயக்கங்களாய் உருப்பெற்று

உருண்டோடின..

விழிதிறந்த போது

என் விழித்திரையில்

அந்த பட்டாம்பூச்சி இல்லை..

அதிர்வின்றி எழுந்து நின்றேன்..

மனதில் ஏதோ ஒரு நிம்மதி..

இப்பூங்கா மீண்டுமொரு முறை

பூப்பெய்தியதாய் ஒரு பிரமை..

என் மனம் இப்போது

ஆனந்தமாய் படபடத்துக் கொண்டிருந்தது

மெல்ல வீடு நோக்கி நடக்கத்தொடங்கினேன்..

குனிந்து பார்க்கவில்லை என்றாலும்

எனக்கு நிச்சயமாய்த் தெரியும்

அந்த பட்டாம்பூச்சி

இப்போது அமர்ந்திருப்பது

என் தோள் மீது..

Popularity: 4%



உனக்காக… (என் முதல் கவிதை)

Posted by as கவிதை, தமிழ்




(தயவு செய்து கவிஞர்கள் மன்னிக்க..)



உனக்காக வார்த்தைகள் தேடி

வார்த்தைப்பஞ்சத்தில் அலைந்த எனக்கு

ஆறுதல் சொன்னது

ஒரு பூச்செடி.



உன் பெருமை பாடியபடி

அதன் கிளையில்

ஒற்றை ரோஜா

வசீகரமாய் சிரித்துக்கொண்டிருந்தது…



என்னைப்போலவே அலைந்து

கடைசியில் பூக்களுக்கு

கட்சி மாறிய

தன் கதையை சொல்லி

ஆறுதல் சொன்னது…

ம்ம்… அனுபவஸ்தன்தான்..



மனதைத் தேற்றியபடியே

திரும்பினேன்..

ஆறுதல் வேண்டி காத்திருந்ததது

ஒரு நந்தவனம்..

Popularity: 4%



நிலவு கடுப்ப நினைவுகளே..!

Posted by as கவிதை, தமிழ்




தூக்கம் தொலைத்த இரவுகளில் துணைவந்து,


தேய்வதாய் மயக்கி தினம் வளர்ந்து,


மாநிலம் மேவியோடிய போதும் உடன்வந்து,


நோதலோ காதலோ நிச்சயம் தருவதி்ல்


நிலவு கடுப்ப நினைவுகளே..!

Popularity: 4%



என் அறையில் தொலைத்த என் வாசனை

Posted by as கவிதை, தமிழ்




கல்லூரி விடுதிகளில்
களைப்பாறுவதற்கென்றே
வந்து தங்கிவிடுகின்றன
சில வாசனைகள்


உருவமற்று உருவம் பெறும்
ஒரு அமீபாவைப் போல்
ஒவ்வொரு அறையிலும்
ஒரு விதமாய் ஒரு நிறமாய்
ஒரு குணமாய்
உருவம் பெறுகின்றன


முதன் முதலாய்
என் அறையில்
அடியெடுத்து வைத்த அன்று
உணரவில்லை


என்று இந்த வாசம்
உருவானதென்றும் தெளிவில்லை


ஆனாலும் ஒரு நாள்
உருவம் பெற்று விட்டது…


எப்படி வந்ததிது?


பழமையின் வாசனையுடன்
புது சுண்ணாம்பின் வாசனை,
நான் பயன்படுத்தும் ஷேவிங்லோசன்,
பயன்படுத்தாமல் தூக்கிப்போட்ட
பால்பாயிண்ட் பேனா,
இன்று வாங்கிய சாக்லேட்,
உலர வைத்த துணியின் வாசம்,
என அனைத்தும் சேர்த்துப் பிசைந்த
ஒரு விசித்திரமான கலவை அது.


அந்த வாசம்
அறைக்கு அறை வேறுபடுவதை
உணர்ந்திருக்கிறேன்.
அது வெறும் வாசமல்ல.


வாசம் செய்யும் மனிதனின் வாசம்.
அவன் குணங்களின் வாசம்.
நுகர்தலுக்கு ஒரு பரிமாணம்
என்று யார் சொன்னது?
பல பரிமாண பிம்பம் காட்டும்
கண்ணாடி அது


நான்காண்டுகளின் முடிவில்
பாலை நிலத்தை நினைவு படுத்தும்
ஒரு மே மாதத்தில்
அந்த பிரிதல் நடந்தது.
உடமைகளாய் உடன் இருந்தவை
அனைத்தையும்
கவனமுடன் பைகளில் கட்டி
வீட்டுக்கு வந்து பார்த்த போது
தொலைந்து போனவை பட்டியலில்
அந்த வாசமும் சேர்ந்துகொண்டது.


அதன் பின் வருடங்கள் மட்டும்
வந்து செல்கின்றன


துரித உணவகங்கள் மணக்கும்
சாலையோரங்களில்,
நகரத்தின் நெரிசல் மிகுந்த
நாளங்காடிகளில்,
புகைவண்டிப்பயனத்தில்,
புதிதாய் வாங்கிய
நோட்டுப்புத்தகத்தில்,
என் அலுவலக
வரவேற்பறையில்,
குளிர்பதனப் பெட்டியில்
என இன்றும் தேடிக்கொண்டிருக்கிறேன்


என் அறையில் தொலைத்த
என் வாசனையை.

Popularity: 4%



Page 1 of 212»